மட்டுவில் கிழக்கு தேவாலயத்துக்கு அருகில் நேற்றிரவு இளைஞர் ஒருவரை இராணுவத்தினர் தாக்கியதையடுத்து அந்த இளைஞர் திருப்பித் தாக்கியதால் களேபரம் ஏற்பட்டது
அந்த இடத்தில் மக்கள் கூட்டம் சேர்ந்துவிடவே அவர்களுக்கும் சிப்பாய்களுக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியது.
இந்தச் சம்பவம் நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றது. சம்பவம் பற்றி முறையிடப்பட்டதைத் தொடர்ந்து உயர் அதிகாரிகள் வந்து மக்களைச் சமாதானப்படுத்திச் சென்றனர்.
இந்தச் சம்பவம் குறித்து பொதுமகன் ஒருவர் தெரிவித்துள்ளதாவது:
குறித்த படைமுகாமுக்கு ஒரு தொகுதி இராணுவத்தினர் புதிதாக வந்துள்ளனர். இவர்கள் மக்களின் வீடுகளுக்கு குறிப்பாக பெண்கள் தனித்துள்ள வீடுகளுக்கு இரவு வேளைகளில் சென்று சேஷ்டை புரியவும் முற்படுகின்றனர். அத்துடன் வீடுகளில் காணப்படும் சிலபொருள்களை எடுத்துச் சென்றும் விடுகின்றனர்.
சில தினங்கள் முன்னர், தனித்துவாழும் பெண் ஒருவரது வீட்டுக்கு இரவு 1 .00 மணியளவில் சென்று அவரை எழுப்பி மருதாணி இருக்கிறதா என்று கேட்டுச் சிரமப்படுத்தியுள்ளனர்.
அதேவேளை, வீதியால் செல்பவர்கள் சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்டு செல்ல முடியாது. மேற்சட்டை இல்லாது செல்ல முடியாது. இரவு 7 மணிக்குப் பின் வீதிகளில் பயணிக்க முடியாது. மைதானங்களில் கூட விளையாட முடியாது என மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
தலைக்கவசம் அணியாது செல்பவர்களை மறித்து தொடர்ச்சியாகத் தாக்கியுள்ளனர். நேற்றிரவும் இவ்வாறு இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார். ஆத்திரம் அடைந்த அவர் திருப்பித் தாக்கி உள்ளார். அதன் விளைவே நேற்றைய சம்பவம்.
இது விடயம் தொடர்பில் நுணாவில் படை அதிகாரிக்குத் தெரிவிக்கப்பட்டு அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அந்த இடத்தில் வைத்தே சிப்பாய்களுக்கு இரண்டு போடு போட்ட அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இராணுவத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளனர் என்றார் ஊர்வாசி ஒருவர்.
No comments:
Post a Comment